Sunday, January 25, 2015

Filled Under: , ,

நூலகங்கள் - நூலகதேசம் இயக்கம்

Share

நூலகங்கள்..................
எழுத்தாளர்கள் என்னும் 
பீனிக்ஸ் பறவைகள் எழுதிய
புத்தகங்களின் சரணாலயம்…
நூலகம்…. சாமான்ய மனிதனையும் சாதனையாளனாக மாற்றக்கூடிய ஒரே பயிற்ச்சிப் பட்டறை. ஒரு வங்கியில் பல கோடி ரூபாய் இருக்கும் ஆனால் பாஸ்புக் வைத்திருக்கவும் ஒருவரால் அவருக்கு சொந்தமில்லாத அவ்வளவு பணத்தையும் எடுத்து பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரு நூலகத்தில் உறுப்பினராக உள்ள சாமான்யன், அந்த நூலகத்தில் உள்ள விலைமதிப்பில்லாத புத்தகங்களை முழு அதிகாரத்துடன் எடுத்து சென்று பயன்படுத்த முடியும், அதோடு மட்டும் அல்லாமல் எடுத்துச் சென்ற புத்தகத்தில் இருந்து பெற்ற அறிவை அவனிடமே வைத்துக் கொண்டு புத்தகத்தை மட்டும் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்ட ஒரே இடம் நம் நூலகம். திருப்பிக் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் மீண்டும் இன்னொருவருக்கு ஞானத்தை வழங்க தயாராகின்றன, ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபத்தை ஏற்றினால் எப்படி ஒளி கொடுத்த தீபத்திற்கு ஒளி குறையாதோ அப்படி தன்னை நாடி வரும் அனைவருக்கும் ஞானத்தை அள்ளி வழங்கும் ஞானலட்சுமியாக விளங்கும் அறிவுத்திருக்கோயில் நம் நூலகங்கள் மட்டுமே. 
வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள் என அனைத்து இடங்களுமே சாதி, மத, இன, நிற மற்றும் வகுப்பு வாதங்கள் நிறைந்து அலறித்துடிக்க, நம் நூலகங்கள் மட்டும் இவை அனைத்தையும் கடந்து மக்களுக்கு இன்றளவும் அறிவொளியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. தீரா நோயான அறிவுப் பசிக்கு, இல்லையென்று சொல்லாமல் அனுகும் போதெல்லாம் அறுசுவை அறிவு விருந்தை அளிக்கும் அன்னப்பூரணி தாய் நம் நூலகம். அள்ள அள்ளக் குறையாதோ அட்சயப் பாத்திரங்கள் நம் புத்தகங்கள். எத்தனை உலகப் போர் நடந்தும் கூட தாக்கப்படாத, பாதிக்கப்படாத புத்தகங்களால் கட்டப்பட்ட அரண்மணைகள் நம் நூலகங்கள். “ஒரு நூலகம் திறக்கப்படும் போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகிறது” என்கிறது யாரோ சொன்ன ஒரு நிதர்சனமான பொன்மொழி. அது உண்மை தானே, நல்ல ஒழுக்க நெறிகள், வாழ்வியல் நெறிகள் மற்றும் நீதிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கும் இடம் ஒன்று இருந்ததால் ஏன் மனிதர்கள் தவறான பாதைகளில் செல்வேண்டி வருகிறது?. நூலகங்களை முழுமையாக பயன்படுத்தினால் சிறைச்சாலைகள் வெறிச்சோடிப் போகும் என்பது தான் உண்மை. ஒவ்வொரு சிறைச்சாலையில் ஒரு நூலகங்களை நிறுவ வேண்டும், அப்படி செய்தால் குற்றவாளியாக உள்ளே செல்லும் ஒருவன் ஞானியாக, ஆசானாக வெளியே வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 
“ஒரு புத்தகம் விற்கும் போது, நீங்கள் விற்பது 12 அவுன்ஸ் காகிதமும், மையும், கோந்தும் அல்ல – முற்றிலும் புதியதொரு வாழ்கையும் தான் என்கிறார் வெளிநாட்டு அறிஞர். கிரிஸ்டோபர் மோர்லி என்பவர். ஒரு எழுத்தாளன் எழுத்தாளுமை மட்டுமே பெற்றவன் அல்ல, தான் கடந்து வந்த கடினமான பாதைகளையும், சோதனைகளையும் அனுபவத்தையும் உலக மக்களுக்கு வஞ்சனையில்லாமல் எடுத்துரைக்கூடியவனும் ஆவான். தான் உழைத்து சம்பாதித்த பணத்தையோ பெருளையோ எவன் ஒருவனும் வஞ்சையில்லாமல் கொடுத்தது கிடையாது. ஆனால் ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாளில் பல வருடங்கள் அரும்பாடுபட்டு சம்பாதித்த விலைமதிப்பில்லாத அனுபவங்களை கொட்டிக் கொடுக்கிறான் தன் எழுத்துக்களால், புத்தகம் என்கிற வடிவில் அப்படி ஒரு புத்தகத்தை விற்கும் தொழில் செய்வது கூட இறைவனுக்கு செய்யும் தொண்டுதான், மக்கள் பணி தான், சமூக சேவை தான். இருக்கும் பல தொழில்களில் இருப்திலேயெ லாபம் குறைவான ஏன் நஷ்டம் கூட அடையும் தொழிலாக இருப்பது பதிப்பக தொழிலும், புத்தகம் விற்கும் தொழிலும் தான். ஆனால் அதையும் மீறி மக்களுக்கு சேவை செய்யும் வாழும் மகாத்மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஏனோ நடிகர் நடிகைகளை தவிர வேறு யாரும் நம் கண்னுக்கு தெரிவதில்லை. 
The Library is the temple of learning and learning has liberated more people than all the wars in the history – Carl T. Rowan. ஞானத்தை, கல்வியை கற்றுக் கொடுக்கும் கோவிலாக நூலகம் இருக்கிறது, கற்பதின் மூலமாக எண்ணற்ற பல மனிதர்கள் சுதந்திரம் அடைந்தை போல வரலாற்றில் எந்த போரும் மனிதர்களை சுதந்திரப்படுத்தியதில்லை என்கிறார் மேலை நாட்டு அறிஞர் கார்ல். டி. ரோவன். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் அவை. இதுவரை மனிதர்கள் நடத்திய போர்கள் தங்கள் நிலப்பரப்பை காப்பாற்றி கொள்வதற்கும், கால்நடைகளையும், தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தானே. இதில் தன் சுயநலத்திற்காக பெண்க்கும், பொன்னுக்கும், மண்னுக்கும், அதிகார போதைக்கும், ஆட்சி வெறிக்காகவும் தானே செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மனிதன் கற்றல் போர் என்பது தன்னை அறியாமை என்னும் பாழும் இருள் சிறையில் இருந்து சுதந்திரப்படுத்திக்கொள்ளவும், தன்னை சார்ந்தவர்களையும், தான் பிறந்த மண்ணையும் சுதந்திரப்படுத்தும் அல்லவா. இறைவனை காண வேண்டும் என்ற துடிப்பு உங்களுக்கு இருந்தால், நான் சொல்கிறேன் இறைவன் ஞான வடிவாக இருக்கிறான், கற்றல் போர் செய்தால் ஞான வடிவாக இருக்கும் இறைவனை காண முடியும். ஏன் நாம் அனைவரும் கற்றல் போர் புரியக் கூடாது? மாறாக இன்றைக்கு கற்றல் குறைபாடு, வாசித்தலில் கூட குறைபாடு மேலோங்கி இருக்கிறது.
எழுதப்படிக்க தெரியாது ஒரு குடிகாரனுக்கு கூட ஒரு மாவட்டத்தில் எங்கெங்கு சாராயக் கடை உள்ளது என்று தெரியும், ஆனால் மெத்தப் படித்த பட்டதாரிகள் எத்தனை பேருக்கு மாவட்டத்தில் எங்கெங்கு நூலகங்கள் உள்ளது என தெரியும்? 
ஒரு நாள் சாராயக் கடை மூடியிருந்தால் அதற்காக வருத்தப்பட கூடியவர்கள் இருக்கிறார்கள். மூடியிருக்கும் கடை முன் கூட்டம் கூடுகிறார்கள், மேலிடத்தில் புகார் செய்கிறார்கள், கடை ஊழியர் மீது நடவடிக்கை கூட எடுக்கப்படுகிறது. கடை மூடப்பட்ட அன்றயை தினம் குடிகார்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் செய்தியாக வருகிறது. கடை மூடப்பட்ட அன்றயை தினம் ஏற்பட்ட நஷ்டங்கள் கணக்கிடப்படுகிறது. விழாக் காலங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப் படுகிறது. கடை மூடப்படும் நேரம் அதிகரிக்க கோரி வேண்டுகோள் வைக்கப்படுகிறது. வருடத்தில் மூன்று நாட்கள் தவிர மற்ற நாட்கள் செயல்படுகிறது. ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் நூலகம் மூடப்பட்டு கிடந்தால் கேட்க நாதியில்லை. ஊழியர் வந்தாரா இல்லையா என்று தெரியாது? அங்கே எத்தனை செய்தித்தாள்கள் எத்தனை வருகிறது என்று தெரியாது. இப்படி எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியாது. ஆனால் நம் குழந்தைகள் நன்றாக படித்துவிட வேண்டும். இந்தியா வல்லரசாகிவிட வேண்டும். அரசு வேலை கிடைத்துவிட வேண்டும். இதென்ன கொடுமையான மனநிலை? 
ரோட்டோரத்தில் இருக்கும் தள்ளுவண்டி ஹோட்டல் கடையில் கூட இன்று என்ன ஸ்பெஷல் உணவு என்று எழுதி போட்டிருப்பார்கள். இன்று எத்தனை நூலகங்களில் இன்று எந்த நூல் புதுவரவு என்று எழுதி போட்டுள்ளார்களா? ஆயிரம் ரூபாய் கூட கொடுத்து பாழாய் போன திரைப்படத்தை வந்த முதல் நாளே சென்று பார்க்கும் இன்றைய இளைஞன், லட்ச ரூபாய் ஆனாலும் வந்த அன்றே புதிய காரை வாங்கும் கார் பிரியர்கள், மொபைல் போன் பிரியர்கள், கையில் காசு இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது குடிக்கும் குடிகாரர்கள், மேக்கப்புக்காகவும், உடைகளுக்காவும் ஆடம்பர செலவு செய்யும் இளைஞர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். அறுபது ரூபாய் கொடுத்து வருடம் முழுவதும் எண்ணற்ற புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க ஏன் இளைஞர்கள் முன்வரவில்லை? ஏன் ஊடகங்களின் கழுகு கண்ணிற்கு நூலகங்களும், நலிந்த எழுத்தாளர்களும், வாசகர்களும் தெரியவில்லை? 
ஒரு சாராயக் கடையில் எத்தனை லட்ச ரூபாய்க்கு மது வைத்திருந்தாலும் விற்றுத்தீர்ந்த விடுகிறது. குடித்தால் உயிருக்கு ஆபத்து என்று குடிகாரன் நெற்றியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் எழதினால் கூட குடிப்பவர்கள் நிறுத்தவதில்லை. ஞானப்பால் கொடுக்கும் நூலகங்களுக்கு ஏன் இப்படிபட்ட ஆதரவு இல்லாமல் போனது? யாரை நம்பி புத்தகம் எழுதிகிறான் பாவப்பட்ட எழுத்தாளன்? இன்றும் குறையாத நம்பிக்கை நம் மீது. மக்கள் நல்ல விடயங்களை படிப்பார்கள் என்ற அதீத நம்பிக்கை. நண்பணின் பிறந்த நாளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற மூன்று வார்த்தைகளை சொல்லாத சோம்பேறிகள் தான் இன்று அதிகம். இவர்களுக்கு நடுவே மக்களுக்காக, மக்களின் நலனுக்காக தன்னுடைய வருடக்கணக்காண அனுபவத்தை லட்சோப லட்சம் வார்த்தைகளால் நமக்கு புரியும் படியாக, நமக்கு உபயோகப்படும் படியாக எழுதும் ஒப்பற்ற எழுத்தாளர்களை அங்கீகரிக்காத இந்த உலகம், புறக்கணிக்கும் இந்த உலகம் எங்கு போய் முடியும்?
குடிகாரன் முழுமையாக சாராயக் கடையை பயன்படுத்துகிறான், விடுமுறை நாட்களில் செல்கிறான், நேரம் கிடைக்கும் போது செல்கிறான், தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான், வாங்கி கொடுத்து ருசிக்க வைக்கிறான், கடை மூடப்பட்டு கிடக்கும் போது கள்ள விற்பனையிலாவது வாங்கி குடிக்கிறான், விருந்துகளில் சாராயத்திற்கு முதல் மரியாதை கொடுக்கிறான். வாங்கி கொடுத்து உபசரிப்பதை கவுரவமாக கருதுகிறான். ஆனால் மெத்தப்படித்த நாம் யாருக்காவது ஒரு புத்தகம் வாங்கி கொடுக்கிறோமா? தேடிப் போய் பிடித்த புத்தகத்தை வாங்குகிறோமா? கிடையாது. கடன் வாங்கிய புத்தகத்தை கூட திருப்பிக் கொடுக்காதவர்கள் நாம். 
தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளது? அவற்றின் இந்த வருட புதுவருட, பொங்கல், தீபாவளீ விற்பனை எவ்வளவு? அரசின் லாபம் எவ்வளவு என்று அக்குவேறு ஆணி வேறாக அலசும் ஊடகங்கள் ஏன் தமிழகத்தில் நூலகங்கள் எத்தனை உள்ளது? எவ்வளவு புத்தகங்கள் உள்ளது? எத்தனை எழுத்தாளர்கள் நலிந்து போய் பஞ்சத்தில் தூக்கில் தொங்கினார்கள் என்று செய்திகளை சொல்வதில்லை? விவசாயி பஞ்சத்தில் சாக வேண்டும், எழுத்தாளன் ஆதங்கத்தில் சாக வேண்டும் என்று தலைவிதியா என்ன? என்று நாம் இந்த அவலங்களை உடைத்தெரியப் போகிறோம்? 
கிராமப்புற நூலகங்கள் கேட்பாரற்று பூட்டிக் கிடைக்கிறது, வைக்க இடமில்லாமல் நூல்கள் என்ன கதி ஆனது என்று தெரியவில்லை? திறந்திருக்கும் கிராமப்புற நூலகங்களுக்கு செய்தித்தாள்கள் இல்லை, மாணவர்களுக்கு நூலக வகுப்பு நடத்தப்படுதில்லை, நூலகம் இல்லாத கல்லூரிகள், பள்ளிகள் ஆடம்பரமாக உள்ளது, இருக்கும் நூலகங்களுக்கு நூலகர்கள் போதிய அளவு இல்லை, ஏன் ஊடகங்கள் இவற்றை கண்கொண்டு காண மறுக்கிறது? ஏன் விவாதிக்க நேரமில்லாமல் போனது?
இரத்த தானம், அன்ன தானம், உடல் உறுப்பு தானம், கண் தானம் போன்றவற்றிற்கு மிகப் பெரிய அளவில் முகாம்கள் நடத்தப்படுவது போல ஏன் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படுவது இல்லை? பிரபலங்களின் பிறந்த நாட்களிலில் ஏன் அவர்கள் புத்தகங்களை தானமாக வழங்கக்கூடாது? பற்பசைக்கும், செருப்புக்கும் விளம்பர தூதுவர்களாக பெருமையுடன் வலம் வரும் பிரபலங்கள் ஏன் புத்தக விற்பனையாளர்களுக்காக, புத்தகங்களுக்காக பேசக்கூடாது? பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும் புத்தக கண்காட்சிகளில் மற்றும் பொருட்காட்சிகளில் ஏன் நூலக உறுப்பினர் சேர்க்கை கடை ஒன்று திறக்க கூடாது? நலிந்த எழுத்தாளர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி பதிப்பகங்கள் ஏன் குரல் கொடுத்து உதவ கூடாது??
நூலகங்கள் பிரம்மாண்டமான புத்தக சேமிப்பு கிடங்காக இருக்க கூடாது, மாறாக எழுத்தாளர்களையும், வாசகர்களையும் ஒன்றினைக்கும் அல்லது சங்கமிக்க வைக்கும் இடமாக மாற வேண்டும். நூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்க இயலாத ஏழை உரிமையோடு விரும்பிய புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்க நூலகங்கள் வழிவகை செய்ய வேண்டும். குறைந்த பட்சம் நூலகத்தில் உறுப்பினர் ஆவதற்கு என்ன வழிமுறைகள் என்றாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட வேண்டும். கோடாண கோடி புத்தகங்கள் நூலகங்களில் உள்ளன அவற்றை படிக்க வாசகர்கள் இன்று இல்லை. தொலைக்காட்சிகள் வாரந்தோறம் டாப் 10 திரைவிமர்சனம் செய்வது போல டாப் 10 புத்தக விமர்சனம் செய்ய வேண்டும். சிறந்த நூலகங்கள், சிறந்த வாசகர்கள், சிறந்த நூலகர்களுக்கு விருது வழங்க வேண்டும். சிறந்த புத்தகங்கள், சிறந்த எழுத்தாளர்கள். சிற்ந்த வாசகர்களின் நேர்காணல்கள்களை தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கொண்டாட வேண்டும். அப்போது தான் நூலகங்களின் எழுச்சி துவங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் வாசகர்கள் கிடைப்பார்கள், அதிக படைபாளிகள் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.
மாணவர்கள் நூலகங்களை எப்படி பயன்படுத்த வேண்டும், நூலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நூலகங்கள் எங்கெங்கு உள்ளது, நூலகத்தில் உள்ள வசதிகள் என்னென்ன, புரவலர்கள் என்பார் யார், இதுவரை நூலகங்களால் பயன்பெற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்கிற தகவல்கள் மாணவர்களையும் பொதுமக்களையும் சென்றடைய வேண்டும்.
www.facebook.com/noolagadesam
EMail: noolgadesam@gmail.com
நட்புடன்
அ.தீ. ரமேஷ்கார்த்திக்
சமூகப் பணியாளர், தருமபுரி மாவட்டம்
--
Thanks & Regards,
A.T. RameshKarthik D.IT., MSW., PGDCA., MA (Journalish & Mass Com)
Social Worker & FreeLance Journalist
9944290306
https://www.facebook.com/RameshKarthik.Activist
மாவட்ட தலைவர், இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்

0 comments:

Post a Comment